விருப்பு வாக்கு விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்ட சசிகலா ரவிராஜிற்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைமை காரியாலயம் நோக்கிய நடைபயணம் ஆரம்பமாகியுள்ளது.
மாமனிதர் ரவிராஜின் குடும்ப உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள ரவிராஜ் அவர்களது உருவச்சிலைக்கு முன்பாக நேற்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த அமைதி வழிப் போராட்டம் மதியம் 2.00 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் அதே இடத்தில் சசிகலா ரவிராஜிற்கு நீதி கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்திருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் அடுத்த கட்டமாக சவகச்சேரியில் இருந்து ஏ-9 வீதி வழியாக யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை காரியாலயம் நோக்கி நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நடை பயணத்தின் இறுதியில் சசிகலா ரவிராஜிற்கு நீதி கிடைக்கும் வரை தமிழரசுக் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது நடைபயணம் ஏ-9 வீதி வழியே நுணாவிலை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், தென்மராட்சி