புலிகள் மற்றும் கொரோனா ஆகிய இரு போர்களையும் வெற்றி கொண்டது போல் எதிர்கொள்ள இருக்கும் பொருளாதாரப் போரிலும் வெற்றிபெற ஜனாதிபதி மற்றும் பிரமருக்கும் ஆசி வழங்கியுள்ளார் கங்காராம விகாராதிபதி அஸ்ஸஜி தேரர்.
இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் பிரமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சே மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மகா சங்கசத்தினர் மற்றும் பௌத்த தேரர்களால் ஆசீர்வாதம் வழஙகப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு அனுப்பிய செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (09.08.2020) முற்பகல் பேலியகொட வித்தியாலங்கார பிரிவேனா மற்றும் ஹூணுபிட்டியவிற்கு சென்று மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டார்.
பிரதமர், பேலியகொடா வித்தியாலங்கார பிரிவேனாவிற்கு சென்று பிரிவேனாதிபதி, களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கொழும்பு சிலாபம் பிரிவின் தலைமை சங்கநாயக்கர், திரிபிடக வாகிஷ்வராச்சாரியார் வணக்கத்திற்குரிய கலாநிதி வெலிமிட்டியாவே குசலதர்ம தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பிரிவேனா தர்மக் கல்லூரித் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர், ராஜகிய பண்டிதர் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதுடன், நாட்டின் பண்டைய பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று கம்புறுகமுவே வஜிர தேரேர் கூறினார்.
இந்த தேர்தலின் முடிவுகள் ஒற்றுமையின் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது என்று கூறிய தேரர், ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவர் என்று மஹா சங்கம் உறுதியாக நம்புகிறது எனவும் தெரிவித்தார்.
பின்னர் பிரதமர் கொழும்பில் உள்ள கங்காராம விகாரைக்குச் சென்று கிரிந்தே அஸ்ஸஜி தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
அங்கு அனுசாசனம் நிகழ்த்திய அஸ்ஸஜி தேரர் கூறியதாவது,
புத்தரால் புனிதப்படுத்தப்பட்ட களனி புனித பூமியில் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் பிக்குமாரை சந்தித்து ஆசீர்வாதம் பெற வந்தமையை நாங்கள் பாராட்டுகிறோம். இப்போது இரண்டு யுத்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மற்றொரு யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது.
முதல் போர் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுடனான போர். இரண்டாவது போர் கொரோனா வைரஸ் ஆகும். இப்போது அந்த வைரஸிற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதே போன்று பொருளாதாரப் போரையும் இவர்கள் வெற்றிக் கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கிறோம். ஒழுக்கமான நாட்டை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இதன்போது பிரதமர் செயலாளர் காமினி செனரத், திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), மகிந்த ராசபக்ச, இலங்கை