யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் எலும்பு கூடு மற்றும் ஆடைகளை சான்றாக பார்த்த யாழ் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் கொலையாக இருக்கலாம் என சந்தேகித்து, எதிர்வரும் திங்கட்கிழமை மேலும் அகழ்வதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெறுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் கோவில் வீதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஆடைகளை யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வீ.ரி.சிவலிங்கம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
மீட்கப்பட்ட எலும்பு கூடு மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை சான்றாக வைத்துக் கொண்டு, ஏனைய பகுதிகளை தோண்டி, வேறு சான்றுகள் உள்ளனவா என தேடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு வரும் வரை, மீட்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் மற்றும் ஆடைகளை அதே இடத்தில் வைத்து பாதுகாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு போடப்பட்டுள்ளதுடன், கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு கடமையில் அமர்த்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஏனைய பகுதிகள் அகழ்ந்து, மீட்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்