வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவ காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகரசபை பணியாளர்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வும் தேநீர் விருந்தும் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் தலைமையில் யாழ் மாநகர சபை இந்து விடுதியில் இடம்பெற்றது.
கடந்த மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 27 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இவ்வருட உற்சவம் வழமைக்கு மாறாக கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளி பேணப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்த சூழ்நிலையில் இவ்வருட ஆலய வருடாந்த உற்சவ காலத்தில் மாநகரசபை பணியாளர்கள் தமது சிறப்பான பணியினை ஆற்றியிருந்தார்கள். இதனை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் இவ்வருடம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவத்திற்கான செலவுகள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர சபையின் நிதியிலே செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் சபைக்கு எந்தவித வருமானமும் இல்லாத போதிலும் மாநகரசபையின் சொந்த நிதியில் நல்லூர் ஆலய உற்சவ கால சகல செலவுகளும் சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்