தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் உட்பட்ட போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கொள்வதற்கான நினைவு நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலான இது குறித்த கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக் கட்சிகளின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குகொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் கலந்துரையாடல் தொடர்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராகிய சுரேஷ் பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கான தடையினை நீதிமன்றங்களின் ஊடாக அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தமிழ் மக்கள், போராளிகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான நினைவு நிகழ்வுகளை முன்னெடுப்பது ஒவ்வொரு தமிழ் மக்களுக்குமான உரிமையும் கடமையுமாகும் அதனை இலங்கை அரசாங்கம் தடை செய்வது என்பது தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலிப்பதற்கு சமமாகும்.
ஒட்டுமொத்தமான தமிழ் சமுதாயம் இலங்கை அரசாங்கத்தினுடைய இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இன்றைய சந்திப்பு வெளிப்படுத்துவதாக தெரிவித்த சுரேஸ் பிறேமச்சந்திரன், தடைகளை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தூதுரக அதிகாரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை சந்தித்து முறையிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் எதிர்காலத்தில் இணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் விரைவில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்