கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையிலான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை உரியவாறு மக்கள் பேணாவிட்டால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை நாட்டில் அமுல்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் ஏராளமான இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பேணி மக்கள் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் நாட்டில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் டார்டர் சுதத் சமரவீர கூறினார்.
மக்கள் எங்களுடன் ஒத்துழைக்காமல் சுகாதார வழிகாட்டல்களை மீறினால் மீண்டும் சமூகத்துக்குள் கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு மீண்டும் தொற்று நோய் பரவினால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படும்.
சில பொது நிகழ்வுகளுக்கு உரிய, சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
அவ்வாறு வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளுக்கான அனுமதி நிறுத்தப்படும் எனவும் தலைமை தொற்று நோயியல் நிபுணர் கூறினார்.
பொது வெளியில் மக்கள் சமூக இடைவெளியைப் பேணுவதும் முக கவசங்களை அணிவதும் மிக அவசியமானது எனவும் அவா் வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் சுகாதார வழிகாட்டல்களை மக்கள் உறுதியாகப் பின்பற்றினாலும் கூட இப்போது அவை மீறப்படுவதையே பெரும்பாலும் அவதானிக்க முடிகிறது எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவும் அபாயம் இல்லை என நிராகரிக்க முடியாது.
சிரேஸ்ட பிரஜைகள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவார்கள் ஆபத்தான பிரிவினர் என்பதால் அவர்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனவும் உள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீரா அறிவுறுத்தியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை