ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் அனுபவங்களை மையப்படுத்தி புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கின்றார் என்று கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் தேசியப் பட்டியல் வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாது உள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவையே அதற்கு நியமிக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், ரணில் விக்கிரமசிங்க அதனை நிராகரித்துள்ளார்.
தான் தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்குச் செல்வது பொருத்தமில்லை எனவும், அதற்குத் தகுந்த ஒருவரைத் தெரிவு செய்து அனுப்புமாறும் அவர் கட்சியினரிடம் கூறியுள்ளார்.
அத்தோடு கடந்த 25 ஆண்டுகால தலைமைத்துவம் மற்றும் கடந்துவந்த அரசியல் பயணம் குறித்த புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கின்றார் எனவும், தனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகின்றது எனவும் அவர் தன்னைச் சந்திக்க வந்திருந்த கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை