வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் சுதந்திரமாக பணி புரிய பாதுகாப்பு தேவை என வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கையொப்பம் இட்டு செட்டிகுளம் வைத்தியசாலை அத்தியட்சகருக்கு மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
இம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
10.10.2020 ஆம் திகதி வைத்தியசாலையில் இடம்பெற்ற சில நபர்களின், வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பாக.
ஆதார வைத்தியசாலை செட்டிகுளத்தில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் எமது மனசாட்சி படியும் உண்மையாகவும் கடமை புரிகின்றோம். கடந்த 10 ஆம் திகதி இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் அடாவடித்தனமாக உள்ளே நுழைந்த அன்ரன் வினோசன், கொன்சியஸ், பிரேமதாச, சிவதீசன், சிறீ மற்றும் சில நபர்கள் (சிலர் முகமூடி அணிந்து இருந்ததனால் அவர்கள் சிலரை அடையாளம் சரியாக தெரியவில்லை). வைத்தியர் வருணி அவர்களை வெளியே வருமாறு சத்தமிட்டதுடன் பணி புரிந்து கொண்டிருந்த விசேட தர தாதிய உத்தியோகத்தரை வெளியே வருமாறும் சத்தம் இட்டனர் மற்றும் புகைப்படம் எடுத்தும் வீடியோ எடுத்தும் எம்மை பணி செய்ய விடாது தடுத்தனர்.
தற்போதைய கொரொனா நேரத்தில் இவ்வாறு கூட்டமாக வரவேண்டாம் எனவும் புகைப்படம் எடுக்கக்கூடாது என எமது ஊழியர்கள் தெரிவித்த போது எம்மையும் வைத்தியரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தினர்.
அவர்களின் நடத்தை குடிபோதையில் இருந்தது போல காணப்பட்டது. துர்நாற்றமும் வீசியது. பின்னர் வைத்தியசாலையின் முன்னால் பேட்டி கொடுத்துக் கொண்டும் வைத்தியர்களுக்கு எதிராகவும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு எதிராகவும் நடந்துகொண்டனர்.
இது போன்ற அச்சுறுத்தல்கள் தொடராமல் சுதந்திரமாக எமது கடமையை செய்வதற்கு கடுமையான நிர்வாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதோடு இவ்வாறான தனிப்பட்ட சில நபர்களின் அச்சுறுத்தல் தொடருமாயின் எமது வைத்திய சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிப்பகிஷ்கரிபில் ஈடுபடநேரிடும் என்பதையும் தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா