முல்லைத்தீவு சம்பவத்தினை முன்னிறுத்தி சுகவீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்கவிருப்பது எமக்கு மிகுந்த கவலையினை ஏற்படுத்துவதுடன் அவர்களின் கோரிக்கையின் நியாயத்தன்மை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் நடைபெற்ற துர்ப்பாக்கிய சம்பவமான முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணி புரிகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜோன்சன் வைதேகி அவர்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது சிசு இறந்து பிறந்தமையை முன்னிறுத்தி நீண்ட காலமாக வெளிமாவட்டத்தில் பணி புரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களிற்கு அவர்களது சொந்த இடத்திற்கு இடமாற்றம் வழங்க வேண்டி முன்னெடுக்கும் ஒரு நாள் சுகவீன விடுமுறைப் போராட்டம் தொடர்பாக திணைக்களத் தலைவருக்கு அறிவிக்கப்படாது, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்பட்ட குறித்த விடயம் தொடர்பாக பின்வரும் விடயங்களினை முன்வைக்க விரும்புகின்றோம்.
01. முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிபுரிகின்ற யாழ்ப்பாண மாவட்ட உத்தியோகத்தர்கள் நீண்ட காலமாக இடமாற்றமின்றி பணியாற்றுகின்றமை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.02. அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் தங்களுக்கு இடமாற்றம் வழங்குமாறு விடுவிக்கப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
03. மேலும் 2014ம் ஆண்டிற்கு முன்னர் தொடக்கம் பணிபுரிகின்ற இருபதிற்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு"பிந்திய பதிலாள்" என்ற அடிப்படையில் விடுவிப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. ஆயினும் யாழ்ப்பாணத்தில் உரிய வெற்றிடம் இன்மையால் அக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
04. மேலும் ஒவ்வொரு வருடமும் பிரதேச செயலகங்களில் இருந்து கிடைக்கப்பெறும் இடமாற்ற விண்ணப்பங்கள் சிபாரிசு செய்யப்பட்டு அமைச்சின் இடமாற்ற சபைக்கு அனுப்புகின்ற போதும் பதிலாள் இல்லாமையினால் இடமாற்றங்கள் அமுல்படுத்த முடியாமல் போகின்றது.
எனவே சுகவீன போராட்டத்தினை முன்னெடுக்கவிருக்கின்ற வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் நீண்ட காலம் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு பொருத்தமான பதிலீட்டினை சிபாரிசு செய்து தருவார்களானால் பாதிக்கப்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு மிக விரைவான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது இடமாற்றத்திற்கு ஆதரவாக செயற்பட்ட போதும் அமைச்சு மட்டத்தில் இடமாற்றம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் எதிர்பார்த்த வெற்றுக்கள் கிடைக்கவில்லை.
மேற்படி திருமதி ஜோன்சன் வைதேகி அவர்கள் தற்காலிக இடமாற்றக் கோரிக்கை பிரதேச செயலகத்தில் நிராகரிக்கப்பட்டால் அருகிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு விண்ணப்பத்தினை மேற்கொண்டிருக்க முடியும். அல்லது வேறு பொருத்தமான அதிகாரிகளுக்கும் மேன்முறையீடு செய்திருக்க முடியும்.
மேற்படி சிசுவின் இறப்பு தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஒரு முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. அம் முறைப்பாடு தொடர்பாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பினர்களினதும் கருத்துக்களினை பெறவேண்டியுள்ளது.
சிசுவின் இறப்பு தொடர்பான வைத்திய அறிக்கையை எதிர்பார்த்திருக்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையிலே உரிய ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும் என்பதுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி சங்கத்திற்கு பதிலினை வழங்க முடியும்.
நிலைமை இவ்வாறிருக்க மேற்படி முல்லைத்தீவு சம்பவத்தினை முன்னிறுத்தி சுகவீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்கவிருப்பது எமக்கு மிகுந்த கவலையினை ஏற்படுத்துவதுடன் அவர்களின் கோரிக்கையின் நியாயத்தன்மை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்