கொரோனா தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் வளிச் சீராக்கி (Air-Conditioner) பயன்படுத்தப்படுவதால் அங்கு கடமையில் இருக்கும் மருத்துவா்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மருத்துவா்கள் தொற்றுக்குள்ளாகும் அபாயத்தைக் குறைக்க வளிச் சீராக்கி பயன்பாட்டைக் கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
உலகெங்கிலும் முன்னணியில் உள்ள சுகாதார ஊழியர்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியின் அதிக சுமைகளைச் சந்தித்து வருகின்றனர்.
கொரோனாவால் உலகின் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்களைச் சந்தித்துள்ள இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெளிப்புற காற்றின் பயன்பாட்டை அதிகரிப்பது உட்புறங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் வளிச் சீராக்கி அமைப்புகளினால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிகளவு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்