தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள விதைத்த வயல் வெளிகளில் கால்நடைகள் சென்று நெற்பயிர்களை நாசம் செய்வதாக பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வரணி மேற்கில் மேய்ச்சலுக்காக விடப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் வயல் வெளிகளை (சவணால்) நோக்கிச் சென்று பயிர்களை நாசம் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விதைத்து நெற்பயிர்கள் முளை விட்டு வரும் பருவத்தில் இவ்வாறு கால்நடைகள் வயல் வெளிகளுக்கு வருவதால் விவசாயிகள் பெரும் அசெளகரியத்தை சந்தித்து வருகின்றனர்.
ஆகவே கால்நடை வளர்ப்பவர்கள் தமது கால்நடைகளை வயல் கரைகளுக்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இது தொடர்பில் வரணி இயற்றாலை, கப்பூது மற்றும் கரவெட்டி விவசாய சம்மேளனத்தினர் கவனத்தில் எடுத்து கால் நடைகள் வயல் கரைகளை நெருங்காதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் நெற்செய்கைக் காலங்களில் கால்நடை வளர்போர் தமது கால்நடைகளை கட்டியோ அல்லது வயல்வெளிகளுக்கு அண்மையிலுள்ள மேய்ச்சல் தரைகளை பயன்படுத்தாது கால்நடைகளை கட்டுக்குள் வைத்திருந்து விவசாயத்தை காக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், தென்மராட்சி