கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்த இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்த நிலையில் அதன் பின்னர் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறு அடுத்துடுத்து உயிரிழந்த இருவரும் வேறு நோய் காரணங்களுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்திருந்தனர்.
குறித்த இருவரும் உயிரிழந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் பிறப்பில் இருந்தே விசேட தேவையுடைய ஒருவராக இருந்து வந்துள்ளார்.
அதேபோன்று உயிரிழந்த மற்றொருவர் 87 வயதுடைய மூதாட்டியாவார். சிலேவ் ஐலண்ட் பகுதியை சேர்ந்த குறித்த மூதாட்டி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில்தான் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து குறித்த இருவருடைய குடும்பத்தவர்கள் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு