இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்திற்கு வருகைதர வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய தூதர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பில் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, யாழ்ப்பாணத்தில் இந்திய உதவித் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார் எனவும் அறியமுடிந்தது.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் இந்திய ரூபா 100 கோடி (இலங்கைப் பணத்தில் சுமார் 250 கோடி ரூபா) செலவில் 12 அடுக்கு மாடி கலாசார மண்டபக் கட்டடத் தொகுதி ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் திறப்பதற்குத் தயாராகவே உள்ளது.
அதனை அமைத்துத் தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகை தந்து அதனைத் திறக்கும் நிகழ்விலும் பங்குபற்ற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தனது விருப்பத்தை இந்தியத் தூதரிடம் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவரின் விருப்பத்தை உரிய தரப்புக்கு அனுப்புவதாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இதன்போது பதிலளித்தார் எனவும் அறியமுடிந்தது.
Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இந்தியா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்