உலகெங்கும் பதிவான 15 வீத கொரோனா மரணங்கள் காற்று மாசுடன் தொடர்புடையவை என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகும்போது உயிரிழப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜேர்மன் மற்றும் சைப்ரஸ் நிபுணர்களின் ஆராய்ச்சியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா உயிரிழப்புகள் சுமார் 19% ஆகவும், வட அமெரிக்காவில் இது 18% ஆகவும், கிழக்கு ஆசியாவில் 27% ஆகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் சுமார் 17 வீதம் காற்று மாசுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசு காரணமாக அதிகபட்சம் செக் குடியரசில் 29 வீத கொரோனா வைரஸ் உயிரிழப்புகளுக்கும், சீனாவில் 27 வீதம், ஜேர்மனியில் 26 வீதம், சுவிட்சர்லாந்தில் 22 வீதம், பெல்ஜியத்தில் 21 வீதமான இறப்புகளும் ஏற்பட்டிருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்