திவுலப்பிட்டிய தொற்றுடன் இனம் காணப்பட்ட கொரோனா 3வது அலை தற்போது இலங்கையின் 23 மாவட்டங்களில் வியாபதிது 6 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட கொத்தணியாக ஆரம்பித்து தற்போது பேலியகொட கொத்தணியாக விரிவாக்கம் பெற்றுள்ள 3வது அலை கொரோனா தொற்று பரவல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.
நேற்றைய தினமும் 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 467 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 115 பேரும் நாடு திரும்பிய கடலேடிகள் 4 பேரும் உள்ளடங்கியுள்ளனர்.
இதையடுத்து மினுவாங்கொட - பேலியகொட ஆகிய கொத்தணியில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 6313 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 791 ஆக அதிகரித்து பத்தாயிரத்தை நெருங்கியுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானவர்களில் நேற்றைய தினம் 67 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 142 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 630 ஆக உள்ளது.
இதேவேளை கடந்த தினத்தில் அடுத்தடுத்து மூவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை