கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்களில் கொரோனாத் தொற்றுடன் இரு பக்தர்கள் சென்றிருப்பது கண்டறியப்பட்டு மருத்துவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மவாட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், கொரோனா கட்டுப்பாடு காரணமாக இணையவழியில் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் இணைய வழியில் முன்பதிவு செய்தவர்களில் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பேருக்கும், மண்டல, மகரவிளக்கு நாளில் 5 ஆயிரம் பேருக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தமக்கு கொரோனாத் தொற்று இல்லை என மருத்துவச் சான்றிதழ் பெற்று எடுத்துச் செல்லவேண்டும். சபரிமலை செல்லும் நிலக்கல் பகுதியில் மைக்கப்பட்டிருக்கும் நிலையத்தில் குறித்த மருத்துவச் சான்றிதழ் மருத்துவக் குழுவினர் பரிசோதித்து வருகின்றனர்.
அதன் பின்னரே மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறன்றனர். சந்தேகப்படும் வகையில் கொரோனா அறிகுறியுடன் யாராவது சென்றால் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுவதற்கும் ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, நேற்றைய தினம் நிலக்கல்லில் நடத்திய மருத்துவ பரிசோதனையின்போதே கொரோனாத் தொற்றுடன் இரு பக்தர்கள் சென்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சென்ற ஒரு தமிழ்நாட்டு பக்தருக்கும், கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த ஒரு பக்தருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் மலையேறி செல்ல அனுமதிக்கப்படாது கோணியில் உள்ள மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் 18-ம் படி முன்பு ஏராளான பொலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவர்கள் கவச உடை மற்றும் முககவசம் அணிந்து பக்தர்களுக்கு அரசு விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, கேரளா, தமிழ்நாடு, சென்னை