வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா நகர சபை முன்பக்கம், ஏ - 9 பாதை மற்றும் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் வார நினைவேந்தலை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு, ஆர்ப்பாட்டம் மற்றும் நடை பயணம் மேற்கொள்ள 20.11.2020 தொடக்கம் 29.11.2020 வரை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா, காமாணல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் இ.ராஜ்குமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் முக்கியஸ்தர் சிவபாதம் கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் செல்வநாயகம் அரவிந்தன் ஆகியோரது பெயர்கள் குறிப்பிட்டு குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வவுனியா நகர சபை வாயில் முன்பாகவுள்ள பொங்கு தமிழ் நினைவுத்தூபி, காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான போராட்டத் தளம் என்பவற்றுக்கு முன்னால் பொலிஸார் குவிக்கபடபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிக்கு வருவோர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் மாவீரர் நாளை முன்னிட்டு பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைளிலும் ஈடுபட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா