இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் தினசரிச் சாவுகள் நிரந்தரமாகியுள்ள தற்போதைய நிலையில் கொரோனா 3வது அலையில் இதுவரை 74 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
இலங்கையில் நேற்றைய தினமும் (நவ-22) 400 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் மினுவாங்கொட-பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த 391 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்திருந்த 4 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கும், ரைஷியா மற்றும் சீனாவில் இருந்து வந்திருந்த தலா ஒவ்வொருவருக்கும் இவ்வாறு கொரோத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மினுவாங்கொட-பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா 3வது அலைக்கு தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 20 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் 479 பேர் குணமடைந்து வெளியேறியதை அடுத்து இதுவரை 14 ஆயிரத்து 69 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதன் காரணமாக தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 6015 ஆக உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நேற்றும் நான்கு பேர் மரணமாகியுள்ளார். இதையடுத்து கொரோனா வைரஸ் 3வது அலை தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை 20,171 தொற்றுகளுடன் உலகளாவிய கொரோனா தொற்று பதிவான நாடுகள் வரிசையில் இலங்கை 99வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை