இறுதி சடங்குகளுக்கு உறவினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ள நிலையில் கொரோனா தொற்று நோயால் இறந்த ஐவரின் சடலங்கள் கொழும்பில் உள்ள பொலிஸ் பிரேத அறையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக அருண சிங்கப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சடலத்தை தகனம் செய்ய குடும்பத்தினர் ஒப்புதல் வழங்காததாலும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்ததன் விளைவாகவும் சடலங்கள் பிரேத அறையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் சடலங்கள் 24 மணி நேரங்களுக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்.
எனினும் மேற்குறிப்பிட்ட காரணங்களால் ஐந்து உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் பிரேத அறையில் உள்ள 5 சடலங்களில் இரண்டு கொழும்பு – ஸ்லேவ் ஐலண்ட் பகுதியைச் சேர்ந்தவர்களுடயவை. ஏனைய மூன்று சடலங்களும் மருதானை, மாலிகாவத்தை மற்றும் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்களுடயவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு