கொரோனா வைரஸ் என்ற ஒன்று உலகில் இல்லவே இல்லை என தொடர்ந்து மறுத்துவந்த மதகுரு ஒருவரை ரஷ்ய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
ஃபாதர் செயீர்ஹீ என்ற சமய அந்தஸ்து பறிக்கப்பட்ட இந்த மதகுரு அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண் துறவிகள் மடத்தில் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ள ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ரஷ்யன் ஆர்தோடக்ஸ் திருச்சபையால் மத போதனை செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட இவர் கடந்த ஜூன் மாதம் எகாதெரின்பர்க் அருகே உள்ள ஸ்ரெட்னூரல்ஸ்க் எனும் இடத்தில் உள்ள துறவிகள் மடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இவர் மறுத்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் இவர் மத போதனை செய்வது தடை செய்யப்பட்டது; இறை நம்பிக்கை உள்ளவர்கள் பொது சுகாதார ஆணைகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று இவர் ஊக்குவித்த பின்னர், மே மாதம் சிலுவை அணிவதற்கான உரிமை இவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
செயீர்ஹீயின் ஆதரவாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் நடந்த மோதலுக்கு பிறகு நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மோதலில் மூன்று கன்னியாஸ்திரிகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
அந்த மடாலயத்தின் காவலுக்கு இருந்த பெரும்பாலானவர்கள் கிழக்கு உக்ரைனில் தற்போது நடந்து வரும் சண்டையில் பங்கெடுத்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஃபாதர் செயீர்ஹீ கடந்த காலங்களிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினையும் அவா் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்