"யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. யாழ். மாநகர சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்லன்."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-"யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் விருப்பத்துக்கு அமைவாக மிகவும் பக்குவமாகவும் பொறுப்பாகவும் செயற்படுமாறு கட்சியின் தலைவரின் (மாவை சேனாதிராஜா) கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தேன். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.
புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
யாழ். மாநகர சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்லன்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்