Friday 26th of April 2024 09:16:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
மிலேனியம் சவால் உடன்பாட்டின் முறிவு இலங்கை அரசாங்கத்திற்கு ஆபத்தானதா?

மிலேனியம் சவால் உடன்பாட்டின் முறிவு இலங்கை அரசாங்கத்திற்கு ஆபத்தானதா?


இலங்கை அரசியல் பரப்பில் அமெரிக்காவின் நகர்வுகளில் ஒரு பின்னடைவாககப் பார்க்கப்படும் எம்சிசி உடன்படிக்கை பற்றிய தேடல் தவிர்க்க முடியாதது. ஏறக்குறை அமெரிக்க இலங்கை உறவு முறிந்துள்ளதாகவும் ஜெனீவாவில் அமெரிக்கா புதிய தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகவும் தமிழ் ஊடகப்பரப்பிலும் அரசியல் வாதிகள் மத்தியிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசுகளது அரசியலில் எப்போதும் ஆழமாக பதிவுசெய்யப்படும் விடயம் நலன்சார் நடத்தையாகும். அத்தகைய நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தேசமாக அமெரிக்காவின் அணுகுமுறைகள் காணப்படுவது வழமையானதாகும்.

ஆனால் அமெரிக்கா தனது நலனுக்கு விரோதமாக எதனையும் செயல்படுத்துவதில்லை. அத்தகைய நலன்களை அடைவதற்கான அரசியல் செயல்பாடுகளில் எல்லாவகையான பக்கங்களும் காணப்படும்.இதனால் எம்சிசி உடன்படிக்கை முறிவானது ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதன் உண்மைத் தன்மையையும் தேடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.

எம்சிசி உடன்படிக்கையிலிருந்து இலங்கை வெளியேறியதாக அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கத் தூதரகம் தானாகவே முன்வந்து இந்த உடன்படிக்கையிலிருந்து கைவிடுவதாக தெரிவித்துள்ளது. அதற்கு புறவயமான சூழல் காரணமாக அமையலாம் என கருத இடமுண்டு. அதாவது ஆரம்பம் முதலே பௌத்த பிக்குமாரும் தீவிர போக்குடைய அரசியல் வாதிகளும் அதிகமான எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்பிருந்தே இந்த உடன்படிக்கை ஆபத்தானது என கருத்து தெரிவித்திருந்தது. அது மட்டுமன்றி தென் இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்பிருந்தே தீவிர தேசியவாத உணர்வை ஏற்படுத்தும் உத்தியில் எம்சிசி உடன்படிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளது.

மிக அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக புலமையாளர்களைக் கொண்டு எம்சிசி உடன்படிக்கையின் விளைவுகள் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்டதாகவும் அதில் இந்த உடன்படிக்கை ஆபத்தானது என்பதை அந்த புலமையாளர் குழு உறுதிப்படுத்தியதாகவும் அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை முக்கியமான விடயமாகும்.இவை அமெரிக்காவின் பின்வாங்கலுக்கு காரணமாக அமைய வாய்ப்புள்ளது. அப்படியாயின் அமெரிக்கா ஏன் உடன்படிக்கையிலிருந்து பின்வாங்கியது என்பது பிரதானமாக கேள்வியாகும்.

ஒன்று அமெரிக்கா இலங்கை போன்று பலநாடுகளில் மிலேனியம் சவால் உடன்படிக்கையில் கைச்சாத்திடாது விலகியிருகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மேலும் கால எல்லையை அடிப்படையாகக் கொண்டு உடன்படிக்கைகள் மீளாய்வு செய்து அதன்பிரகாரம் உடன்படிக்கைகளை ரத்து செய்யும் மரபை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை மிக நீண்ட காலமாக இழுத்தடிப்பதனாலும் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனாலும் உடன்பாட்டிலிருந்து வெளயேற வாய்ப்பிருந்துள்ளது.

இரண்டு எண்பது சதவீத விவசாய நிலம் பறிபோகும் என்ற நிலையில் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அரசாங்கம் இத்தகைய உடன்படிக்கைக்கு வராது என்ற அடிப்படையில் ரத்து செய்திருக்க வாய்ப்புண்டு. அது மட்டுமன்றி அத்தகை விடயங்களில் உடன்படிக்கையில் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டு எதிர்காலத்தில் புதிய வகை உடன்படிக்கை ஒன்றினை மேற்கொள்ள அமெரிக்க திட்டமிட்டதன் பிரகாரமும் தற்போது ரத்து செய்ய வாய்பிருந்துள்ளது எனலாம். அதற்கான உரையாடலை ஜனாதிபதி அமெரிக்க வெளியுறவுச் செயலாளரை சந்தித்த போது வெளிப்படுத்தியிருந்தார் என்பதுவும் தற்போது பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் உரையாடல்கள் நிகழ்வதனையும் குறிப்பிட முடியும்.

மூன்றாவது திருகோணமலை நகரத்தை கொழும்பு நகரத்திற்கு அடுத்த நகரமாக மாற்றுவதற்கான திட்டமிடல் எம்சிசி உடன்பாட்டில் காணப்படுவதுடன் மூன்று மணித்தியாலத்தில் கொழும்பு -திருகோணமலை போக்குவரத்தை மாற்றியமைக்கும் அதி வேக நெடுஞ்சாலைத்திட்டம் ஒன்றையும் மிலேனிய உடன்படிக்கை கொண்டிருந்தது. இதன் உண்மை நோக்கம் இந்தோ-பசுபிக் உபாயத்திற்குள் திருகோணமலைத் துறைமுகத்தை உள்ளடக்குவதுடன் அதனை அண்டிய கடல் பிரதேசத்தி-ன் வளங்களையும் கட்டுப்பாட்டையும் இந்திய-அமெரிக்க கூட்டின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளடக்குவதாக அமைந்திருந்தது. குறிப்பாக 2020 இல் இந்தியா தனித்தும் இந்தியா அமெரிக்க ஜப்பான் கூட்டாகவும் இக்கடல் பிரதேசத்தில் கடல்படைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

அது மட்டுமன்றி 2019 இல் கிழக்கு கடல் பிரதேசம்(திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரை) முழுவதும் எண்ணெய்வளம் தொடர்பில் அமெரிக்க ஆய்வு மேற்கொண்டுள்ளது. அக்காலப் பகுதியில் திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கா கடற்படைத் தளம் ஒன்றை நிறுவப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவம்சா தெரிவித்திருந்தார்.அத்தகைய இலக்கினை விஸ்தரிக்கும் நோக்கமாகவே எம்சிசி உடன்படிக்கை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் பிரகாரம் திருகோணமலை சர்வதேச வலைக்குள் போய்விடும் என்ற இலங்கை அரசாங்கத்தின் எச்சரிக்கை அமெரிக்காவை உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்ள காரணமாக அமைந்திருக்கலாம்.

நான்காவது இலங்கையில் அமெரிக்காவின் பிடியைவிட சீனாவின் பிடி பலமடைந்திருப்பதன் விளைவாகவும் உடன்பாட்டை அமெரிக்கா கைவிடக் காரணமாக அமைய வாய்ப்புள்ளது.அதாவது இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள உறவானது பலமாகவும் தந்திரோபாய ரீதியானதாகவும் காணப்படுவதனால் அமெரிக்க உத்திகள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. சீனா ஹம்பாந்தோட்டையில் நிறுவியுள்ள தொழில்சாலைகள் 99 வருட குத்தகை மற்றும் ஏனைய பிரதேசங்களில் நிறுவிவரும் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கைக்கு அதிக வாய்ப்பானதாகவும் இலாபகரமானதாகவும் அமைந்துவருகின்றன என அரசாங்கம் கருதுகிறது. சீனாவின் நடவடிக்கைகள் எவையும் இலங்கையின் இறைமையைப் பாதிக்காது என அரசாங்கம் கருதுகிறது. ஆனால் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கையும் இலங்கையின் இறைமைக்கு எதிரானது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கும் தீவிரவாத அரசியல் தலைமைகளுக்கும் பௌத்தமகா சங்கத்தினருக்கும் உண்டு. இதனால் அமெரிக்காவின் நீண்ட கால நோக்கம் எதுவும் சாத்தியமாக வாய்ப்பில்லை என்ற எண்ணத்துடன் அமெரிக்கா விலகியிருக்க வாய்பட்புண்டு.

ஐந்து அமெரிக்கா அண்மையில் ஏற்படுத்திக் கொண்ட கொள்கை மாற்றத்தின் பிரகாரம் சிறிய நாடுகளுடன் முரண்படாது விட்டுக் கொடுப்புகளை செய்வதன் வாயிலாக உறவைப் பலமானதாக்குதல் என்ற அடிப்படையிலும் மிலேனியம் சவாலை கைவிடத் தீர்மானித்திருக்கலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையுடனான உறவை பலபட்படுத்தவும் ஒத்துழைக்கவும் அமெரிக்கா தயாராவதாகவே தெரிகிறது.

எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது இலங்கை அரசாங்கத்துடன் அனுசரித்துப் போகும் எண்ணத்தை அமெரிக்கா கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அதில் ஏதாவது அபாயம் ஏற்பட்டு விடக்மூடாது என்பதற்காகவே கொழும்பு நிதி நகரதட்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்குவதை அண்மையில் உறுதிப்படுதியிருந்தது. அத்தகைய உறுதிப்படுத்தலானது இந்தியாவை அணைத்துக் கொண்டு அமெரிக்காவை கையாளுவதாகவே தெரிகிறது. அதனையும் அமெரிக்காவால் மேற்கொள்ள வைத்துள்ள உத்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு வகையில் குறிப்பிடுவதானால் இந்தியாவும் ஜப்பானும் உள்ளே அமெரிக்கா வெளியே என்பது போலான தோற்றப்பாட்டை தந்துள்ளது. அதனையும் அமெரிக்காவுக்குள்ளால் எடுக்க வைத்துள்ளது. எனவே இலங்கை இந்தோ-பசுபிக் அணியிலிருந்தும் விலகவில்லை சீனாவின் புதிய பட்டுப்பாதையிலிருந்தும் விலகவில்லை. இரண்டையும் இணைத்துக் கொண்டு பயணிக்கிறது. இதனை ஜெனீவாவிலும் தமிழர் தரப்பு எதிர்காலத்தில் கண்டுகொள்ளலாம்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE