இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த அப்புலிங்கம் போதன் (வயது 49) என்ற மீனவர் தனியே தன்னுடைய படகிலே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார்.
அவ்வேளை வத்தைப் படகில் வந்த இந்திய மீனவர்கள் போதன் மீது சரமாரிய தாக்குதல் நடத்தியதுடன், அவருடைய படகு இயந்திரத்தின் இணைப்புக்களைத் துண்டித்து அதனைத் தூக்கிச் செல்ல முயன்றிருக்கின்றர்.
அதன் பின்னர், தனியே வந்ததால் விட்டுச் சென்றிருக்கின்றோம், வேறு நபர்களும் வந்திருந்தால் கொலை செய்து கடலில் வீசியிருப்போம் என்று அவர்கள் மிரட்டிவிட்டுச் சென்றிருப்பதாக பாதிக்கப்பட்ட போதன் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை அவர், வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்