கொரோனா வைரஸ் தொற்று நோயின் முதல் அலையின்போது ஒன்ராறியோவில் கொரோனா தொற்று நோயாளிகளைப் பராமரிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட பேர்லிங்டன் கள மருத்துவமனை இவ்வாரம் முதல் இயங்கவுள்ளது.
தொற்று நோய் முதல் அலையின்போது பேர்லிங்டனின் சுமார் 2 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட பின்னர் பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஒன்ராறியோவில் தொற்று நோயாளர்கள் அதிகரித்து மருத்துவமனைகள் அதன் திறனை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த தள மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
ஒன்ராறியோ -பேர்லிங்டனில் உள்ள ஜோசப் பிராண்ட் மருத்துவமனையின் ஒரு நிர்வாகப் பகுதியாக இயங்கவுள்ள இந்தத் தள மருத்துவமனை கொரோனா தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தயாராக இருப்பதாக மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் வாண்டேவால் தெரிவித்துள்ளார்.
73 படுக்கைகள் கொண்ட இந்த தள மருத்துவமனையில் அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை முழுத் திறனுடன் இங்கு பராமரிக்க முடியும் என நேற்று செவ்வாய்கிழமை அவர் கூறினார்.
இவ்வாறான ஒரு வளத்தை கொண்டிருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம். ஆனால் இந்த நேரத்தில் அதிகரித்துவரும் நோயாளிகாளால் இந்தத் தள மருத்துவமனையை நாங்கள் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவது வெளிப்படையாக கவலையளிக்கும் நிலையாக உள்ளது எனவும் அவா் கூறினார்.
தெற்கு ஒன்ராறியோ பிராந்தியத்தில் ஹாமில்டன், நயாகரா, ஹால்டிமண்ட், பிராண்ட் மற்றும் பேர்லிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்று நோயாளிகளின் அதிகரிப்பால் அதிக அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளன.
எங்கள் சுகாதார துறை அதன் உச்ச வரம்பு சேவையை தற்போது வழங்கி வருகிறது என ஹாமில்டன் மருத்துவ வலையமைப்பு தலைவர் ராப் மேக்ஸாக் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
தள மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ள நோயாளிகள் தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர். நோயாளிகளின் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னர் அவா்கள் தற்போது சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் இருந்து தள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் எனவும் ராப் மேக்ஸாக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தள மருத்துவமனைக்குத் தேவையான சுகாதாரப் பணியாளர்களைப் பெற்றுக்கொள்வது ஒரு சவாலாக இருந்தது. தற்போது 30 படுக்கைகளைப் பராமரிக்கப் போதுமான பணியாளர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் மேலதிக ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தும் திட்டங்களும் உள்ளன.
கள மருத்துவப் பணியாளர்களில் தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள், இயன் மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் உள்ளனர் எனவும் ஹாமில்டன் மருத்துவ வலையமைப்பு தலைவர் ராப் மேக்ஸாக் கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்