நீர்கொழும்பு மாநகரசபை பிரிவில் மீனவர்கள் ஐவர் உள்ளிட்ட மேலும் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாநகரசபை பிரிவிற்குட்பட்ட கட்டுவ பேஸ்லைன் சாலையில் அமைந்துள்ள பெட்டெஸ்டா புனர்வாழ்வு மையத்தில் இருந்து 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் மறுவாழ்வுக்காக தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உள்ள 100 பேரில் 50 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே 36 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒரு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து மீனவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விரைவான ரெபிட் அன்டிஜன் சோதனையில் குறித்த ஐந்து பேருக்கும் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் வசந்த சோலங்கா ஆராச்சி தெரிவித்துள்ளார்கள்.
நீர்கொழும்பு பெரியமுல்லை பஸ் டிப்போ எஸ்.எல்.டி.பி ஊழியர்கள் இருவருக்கும் பி. சி. ஆர் பரிசோதனையின்போது கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
மற்றும் நீர்கொழும்பில் உள்ள எல்.பி. நிதி நிறுவனத்தின் ஊழியரும் அவரது தாயும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நேற்றைய தினம் (ஜன-16) மட்டும் நீர்கொழும்பு மாநகரசபைக்குட்பட்டு 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நீர்கொழும்பில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 434 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமை பொது சுகாதார ஆய்வாளர் என்.கே.யூ.கே குணரத்ன தெரிவித்துள்ளார்கள்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, சுவீடன்