காலி மைதானத்தில் இடம்பெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்ரத தொடர்ந்த இலங்கை அணி 381 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
நான்கு விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்ங்களுடன் இன்றைய 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி சார்பில் நேற்றைய தினம் தனது 11வது சதத்தை கடந்திருந்த ஏஞ்சலோ மத்தியூஸ் மேலதிகமாக 3 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.
தொடர்ந்து வந்த மென்டிஸ் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார். அடுத்துவந்த டில்ருவான் பெரேரா நிரோசன் டிக்வெலவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
7வது விக்கெட்டுக்காக 89 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இலங்கை அணியின் ஓட்டம் 332 ஆக இருந்த போது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிரோசன் டிக்வெல 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார்.தொடர்ந்து வந்த வீரர்கள் ஏமாற்ற இறுதி விக்கெட்டாக வீழ்த்தப்பட்ட டில்ருவான் பெரேரா 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
இறுதியில் 139.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி.
பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களையும், மார்க் வூட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து தனது முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.
இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டொம் சிப்லேவை ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், கிராவ்லேயை 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சியளித்தார் எம்புல்தெனிய.
5 ஓட்டங்களைப் பெறுவதற்குள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை அடுத்து களமிறங்கிய பெயிற்சோ மற்றும் ஜோ ரூட் இணை தூக்கி நிறுத்தியுள்ளது.
பெயிற்சோ 24 ஓட்டங்களுடனும், ருட் 67 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ள நிலையில் 2 விக்கெட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்ற போது இன்றைய 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை