முல்லைத்தீவு மாவட்டம் களிக்காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட யானையைச் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் யானைத் தந்தங்கள் இரண்டு மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த நிலையில் மிகப் பெரிய தோற்றம் கொண்ட யானை ஒன்றின் சடலம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்து பல நாட்ளாக இருக்கலாம் என்று கருதப்பட்ட குறித்த யானையின் தலைப் பகுதியில் காயங்கள் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை குறித்த யானையின் தந்தங்கள் இரண்டும் அறுத்து எடுக்கப்பட்டிருந்தன. இதனால் தந்தத்திற்காகவே அது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று குறித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து தந்தங்கள் இரண்டு, துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என்று அருவியின் முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு