ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை ஆதரிப்பதாக 18 நாடுகள் உறுதியளித்துள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்ப்பதாக இந்த நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.
இதனை விட மனித உரிமைகள் பேரவையில் மேலும் பல உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறும் வகையில் இலங்கை பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மொண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் பேரைவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் செயன்முறை, நல்லிணக்கம், மீள நிகழாமை மற்றும் கட்டாய தகனக் கொள்கை ஆகிய விடயங்களை முன்னிறுத்தி இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படாலம் எனக் கருதப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் கீழ் நீதித்துறை சுயாதீனம் மற்றும் சுயாதீன அமைப்புக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்தத் திருத்தத்தை கண்காணிக்கவும் ஜனநாயக ஆட்சியை உறுதி செய்யவும் இந்தத் தீா்மானத்தில் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.