இலங்கைக்கு வழங்க உறுதியளிக்கப்பட்ட இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் கோவிட்19 தடுப்பூசி மார்ச் ஏப்ரல் மாதங்களில் இலங்கைக்குக் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விநியோக தாமதத்தால் இலங்கையின் தடுப்பூசித் திட்டங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் -03 திகதியிடப்பட்ட சீரம் நிறுவனத்தின் கடிதத்தில் இலங்கைக்கு வழங்க உறுதியளிக்கப்பட்ட 10 இலட்சம் தடுப்பூசிகளில் தாமதம் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் இன்று தெரிவித்துள்ளர்.
தடுப்பூசி உற்பத்தி திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக உறுயளித்த காலத்தில் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறுவதற்காக ஒரு தடுப்பூசிக்கு 5.25 அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இலங்கை பணம் செலுத்தியுள்ளது.
இதில் 5 இலட்சம் தடுப்பூசிகள் பெப்ரவரி இறுதியில் வழங்கப்பட்டன. மீதமுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையிலேயே இலங்கைக்காக தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் ஏற்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத இந்தத் தாமதமான வழங்கல் தொடர்பில் உடன்பாடு இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவும், செலுத்தப்பட்ட முற்பணத்தை மீள பெறவும் இலங்கை விரும்பினால் அந்த யோசனைகளை சீரம் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் சி. பூனவல்லா கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை