அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மாநாடு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக தொழில் பயிற்சி வளாக மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் அச்சங்கத்தின் செயலாளரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத்குமார சுமித்தஆராய்ச்சி, முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், சங்கத்தின் உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்தஆராய்ச்சி உரையாற்றுகையில்,
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டங்கள் ஊடாக அவர் ஒரு சந்தர்ப்பத்தில் மன்னிப்பு கேட்குமளவிற்கு நாங்கள் அன்று வலுவான சங்கமாக போராட்டத்தை முன்னெடுத்தோம்.
உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் என்பது மக்களிற்கு தொந்தரவையே கொடுத்தது. கோவில்கள், பாடசாலைகளிற்கு கூட செல்லமுடியாத அளவிற்கு அந்த அரசாங்கம் செய்தது. மீண்டும் ஓர் யுத்த களத்தை உருவாக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் அமைந்தது. பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன. அவ்வாறான நிலையிலிருந்து இந்த நாட்டின் ஆட்சியை நாங்கள் மாற்றியுள்ளோம்.
இந்த ஆட்சி காலத்தில் மரம் வெட்டுதல், மணல் கடத்தல் என தமது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பொய்யான விடயங்களை இன்று எதிர் கட்சியினர் கூறுகின்றனர். சஜித் பிரேமதாஸ அவ்வாறு பொய்களை கூறுகின்றார். அவை அவர்களின் ஆட்சியில் இடம்பெற்றவை.
சமுர்த்தி பயனாளிகளிற்கு நாங்கள் பல்வேறு வரபிரசாதங்களை முன்னெடுக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. மிக மோசமாக காணப்படும் வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 2 லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான திட்டம் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ளது.
அந்த குடும்பங்களிற்கு வாழ்வாதாரத்திற்காக பணம் வழங்குதல், வீட்டுடன் கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கான நிதியை அரசாங்கம் வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி