கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் நகரின் முடக்கப்பட்ட முக்கிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களில் தொற்று இல்லை என்று அடையாளம் காணப்பட்டவர்கள் இன்று முதல் தமது வணிக நிலையங்களைத் திறந்து வர்த்தகம் செய்வதற்கு சுகாதாரப்பிரிவினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடைகளை மீண்டும் திறக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் மற்றும் யாழ்.வணிகர் கழகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவை வருமாறு,
1. பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமானதாகும். முகக்கவசம் அணியாமல் யாரையும் வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம். முகக்கவசம் இன்றி யாராவது வருகை தந்தால் அவர்களுக்கு முகக்கவசத்தை இலவசமாகவோ அல்லது பணத்துக்கோ வழங்கி முகக்கவசத்துடன் அவர்களை வர்த்தக நிலையங்களுக்குள் அனுமதிப்பது கட்டாயமாகும். முகக்கவசம் அணியாதவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
2. வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் அதிகளவான பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
3. வர்த்தக நிலையக் கதவின் கைபிடிகள் உட்பட வர்த்தக நிலையங்களை கிருமியகற்றும் பதார்த்தங்களைப் பயன்படுத்தி அடிக்கடி சுத்தப்படுத்தி அதிஉச்ச சுகாதாரத்தினைப் பேணுமாறும் , கொரோனா வைரஸிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் வர்த்தகர்களையும், பொது மக்களையும் யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது.
4. வர்த்தக நிலையங்களின் முன்பகுதியில் பொலித்தின் அல்லது கண்ணாடி போன்ற பாதுகாப்பு அமைப்புக்களை மேற்கொண்டு தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
5. புதுவருடத்தை முன்னிட்டு பொதுமக்களின் நன்மை கருதி அதிகளவான பொதுமக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக வர்த்தக நிலையங்களை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து தினங்களிலும் வர்த்தக நிலையங்களை திறந்து காலை 8.30 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை வர்த்தகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு 8.00 மணி வரை பஸ் போக்குவரத்து சேவை நடைபெறும் என இலங்கைப் போக்கவரத்து சபையினரும்; தனியார் போக்குவரத்து சபையினரும் அறிவித்துள்ளார்கள்.
மேலும் பொதுமக்களுக்கு தேவை ஏற்படின் சேவை நேரத்தை நீடிப்பதற்கு போக்குவரத்து துறையினர் இணங்கியுள்ளார்கள். ஆகவே பொதுமக்கள் புதுவருடத் தேவைக்கான உணவுப் பொருட்கள் , உடுபுடைவைகள் உட்பட மற்றும் தேவையான பொருட்களை காலை 8.30 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை நெருக்கடி இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை அனைத்து வர்த்தகர்களும், பொதுமக்களும் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் கொரோனா நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என யாழ்.வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்