கொரோனா வைரஸ் தொற்றுநோயின் நான்காவது அலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ஈரானில் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை முதல் 10 நாட்கள் சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 23 மாகாணங்களில் சமூக முடக்க உத்தரவு கடுமையாக அமுலாகும் என அந்நாட்டு சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அலிரெஸா ரைசி கூறினார்.
புதன்கிழமை புனித ரமழான் மாதம் தொடங்கவுள்ள நிலையில் வணிக நிவனங்கள், பாடசாலைகள், திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக்கள் என அனைத்து இந்த சமூக முடக்கல் உத்தரவால் முற்றாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரானின் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை 2 மில்லியனைக் கடந்து பதிவாகியுள்ளது. அத்துடன், 64,000 -க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இப்போது தொற்று நோயின் நான்காவது அலைக்குள் நுழைந்துள்ளோம் என இன்று முடக்க நிலையை அறிவித்து தொலைக்காட்சியில் பேசிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்