கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் பெண் உட்பட மூன்று பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேக நபர்களையும் கடும் நிபந்தனைகளுடன் தலா இரண்டு லட்சம் பெறுமதியான ஆட்பிணைகளில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டு உள்ளது.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இரவு கடைக்கு பொருட்களை வாங்கச் சென்ற இரண்டு சகோதரர்கள் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனை கேட்பதற்கு சென்ற அவர்களது தாயார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டதாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நான்கு சந்தேகநபர்கள் நேற்றைய (16-04-2021)தினம் கிளிநொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த நால்வரும் இன்றைய (17-04-2021)தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் எஸ். பாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த நான்கு பேரும் கடும் நிபந்தனைகளுடன் தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வழக்கு தவணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது கடந்த 13ஆம் திகதி காலை வயல் காணி ஒன்றில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாகவே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி