ஜூலை 4 சுதந்திர தின விடுமுறைக் காலத்துக்கு முன்னர் 70 வீதமான அமெரிக்கர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கோவிட்19 தடுப்பூசியை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களையும் தடுப்பூசி போடுமாறு அவா் கேட்டுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு ஜனாதிபதி பைடன் நிர்வாகம் முன்னுரிமை அளித்துவருகிறது. ஜூலை 4-ஆம் திகதிக்கு முன்னர் தொற்று நோயை கட்டுப்படுத்தி நாட்டில் ஓரளவேனும் இயல்வு நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பைடன் செயற்பட்டு வருகிறார்.
எனினும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பல அமெரிக்கர்கள் இன்னமும் தயக்கம் காட்டி வருவதால் இந்த இலக்கை அடைவது சவாலாக அமைந்துள்ளது.
கூடிய விரைவில் அனைத்து அமெரிக்கர்களுக்கு தடுப்பூசியைப் போட நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தடுப்பூசி மூலமே இயல்புக்குத் திரும்ப முடியும் என் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பைடன் கூறினார்.
ஜூலை நான்காம் திகதிக்குள் 160 மில்லியன் 18 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதை பைடன் இலக்காகக் கொண்டுள்ளார். தற்போது 105 மில்லியன் அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எனினும் இன்னமும் பல அமெரிக்கர்கள் தடுப்பூசியைப் பெறத் தயங்குகின்றனர். குறிப்பாக 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் தங்களுக்கு இது தேவையில்லை என்று நம்புகிறார்கள். இந்த வயதினரும் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பைடன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் அனுமதி கிடைத்ததும் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க அமெரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா