தமிழினப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு குறித்து முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் ஏற்பாட்டுக் குழுவினர் ஆயத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் நிகழ்வு வருடா வருடம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள நினைவுத் திடலில் மே-18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டு வருவது வழக்கம்.
உலகளாவிய கொரோனா தொற்று அச்சுறுத்தல் இலங்கையிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆண்டும் கொவிட்-19 நிலையை காரணம் காட்டி வெளியிடங்களில் இருந்து யாரும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டிருந்தது.
இதையடுத்து வடக்கு-கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினரால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை பேணி 11ஆம் ஆண்டு நினைவேந்தல் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையில் கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நெருக்கடி நிலையும் மக்கள் நடமாட்டங்களை மட்டுப்படுத்தும் வகையில் தீவிர நிலையை எட்டியுள்ளது.
மே-18 நினைவேந்தலுக்கு தற்போதைய நிலையில் அனுமதி இல்லை எனவும் மீறி ஒன்று கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.
இதேவேளை, நாளை (மே-13) இரவு 11.00 மணி முதல் திங்கள் (மே-17) அதிகாலை 04.00 மணி வரை நாடு பூராவும் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளதை அடுத்து வடக்கு-கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலுக்கு சென்று ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்