எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்க நாடாளுமன்ற பிரவேசம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் 21ஆம் திகதி சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற குழு கூட்டம் அவசரமாக கூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினூடாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நாளில் இருந்து கொழும்பு அரசியல் பரபரப்பாகியுள்ளது.
ஆளும் கட்சி சந்தித்து வரும் உள்ளக - வெளியக நெருக்குவாரங்கள், அதனால் பௌத்த பேரினவாதிகள் தரப்பு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசு தொடர்பான அதிருப்தி அத்துடன் எதிர்க்கட்டிசிக்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து முரண்பாடுகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு ரணிலின் மீள் பிரவேசம் முக்கியம் பெறத்தொடங்கியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வரும் போது அவர்தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற கருத்தை ஆளும் கட்சியின் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து அரசியல் அரங்கை மேலும் சூடாக்கியுள்ளது.
இந்த பின்னணியில் தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா சிகிச்சை நிறைவு செய்யும் அதே நாளில் எதிர்வரும் ஜூன்-21 அன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற குழு கூட்டத்தை அவசரமாக கூட்ட ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் கூடினர். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவு வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை ஒன்றை நிறைவேற்றியிருந்தனர்.
இதனையடுத்து அந்த விடயம் அரசியலில் பேசும் பொருளாக மாறியது.
கட்சியினுள் காணப்படும் நெருக்கடி நிலையால் இவ்வாறு யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் மீள் பிரவேசம் கொழும்பு அரசியலை பெரும் பரபரப்பாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை