உலகின் தலைசிறந்த வீரர்களை உள்ளடக்கியதாக முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வந்த இலங்கை அணி 20-20 உலகக்கிண்ண தொடரிற்கு தகுதி பெறுவதற்கு தகுதிச் சுற்றில் 3 அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும் நிலையேற்பட்டுள்ளது.
2021 ஆண்கள் உலகக் கிண்ண 20 க்கு 20 தொடருக்கான 12 அணிகளைக் கொண்ட சுற்றுக்கு (சுப்பர் 12) தகுதி பெறுவதற்கு, இலங்கை அணி மோதவேண்டிய அணிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இந்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தகுதிகாண் சுற்றில், குழு ஏ இல், உள்ள இலங்கை அணி, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா முதலான அணிகளுடன் போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 அணிகளைக் கொண்ட சுற்றுக்குள் நேரடியாக தகுதிபெற்றுள்ள 8 அணிகள், இரு குழுக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2021 மார்ச் 20 ஆம் திகதி வரையான அணிகளின் தரப்படுத்தலுக்கு அமைய, அணிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 'சுப்பர் 12'க்கான குழு ஒன்றில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலான அணிகள் இடம்பெற்றுள்ளன.
குழு இரண்டில், இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதேநேரம், 12 அணிகளைக் கொண்ட சுற்றுக்குள் தகுதிபெறுவதற்கான 4 அணிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்றில் 8 அணிகள் உள்ளன.
அதில், ஏ குழுவில், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா முதலான அணிகள் உள்ளன.
குழு பி இல், பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பபுவா நியூ கினியா ஓமான் முதலான அணிகள் உள்ளன.
தகுதிகாண் சுற்றில், இந்த இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள், 12 அணிகளைக் கொண்ட சுற்றுக்கு தகுதிபெறும்.
இதன்படி, குழு ஏ இல் வெற்றிபெறும் அணியும், குழு பி இல் இரண்டாம் இடத்தைப் பெறும் அணியும், 12 அணிகளைக் கொண்ட சுற்றுக்குள், குழு ஒன்றில் இடம்பிடிக்கும்.
குழு ஏ இல் இரண்டாம் இடத்தைப் பெறும் அணியும், குழு பி இல் வெற்றிபெறும் அணியும் 12 அணிகளைக் கொண்ட சுற்றுக்குள், குழு இரண்டில் இடம்பெறும்.
2021 ஆண்கள் உலகக் கிண்ண 20 க்கு 20 தொடரை நடத்துவதற்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
இந்தத் தொடரானது, எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதிவரை ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ளது.
1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்று சர்வதேச கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிந்த இலங்கை அணி தொடர்ந்து வந்த காலங்களில் அச்சுறுத்தலான அணியாக திகழ்ந்து வந்தது.
அண்மைக் காலமாக இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக படுதோல்விகளை சந்தித்து பலவீனமான அணியாக மாறியுள்ளது.
இதனால், பெரியளவில் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்காதா ஆப்கானிஸ்தான் அணி கூட நேரடியாக 'சுற்று-12' க்கு தகுதி பெற்றுள்ள போதிலும் இலங்கை அணி தகுதிச் சுற்றில் போராடியே பிரதான சுற்றுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, உலகம்