அமெரிக்காவில் டெல்டா திரிவு கொரோனா வைரஸால் அதிகளவு சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், பாதிக்கப்படும் சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வீதமும் அதிகரித்து வருகிறது.
அல்பா உரு திரிவு கொரோனா வைரஸை விட டெல்டா திரிபு சிறுவர்களை அதிகம் பாதிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்காமை பெரும் கவலையாக மாறியுள்ளதாக இரண்டாவது பெரிய ஆசிரியர் சங்கமான அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராண்டி வீங்கார்டன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை, சிறுவர்கள் குறித்து மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசி எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பான முககவசங்களை அணிவதுடன், சிறுவர்கள் சமூக இடைவெளியைப் பேணி நடந்துகொள்ள வழிகாட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
டெல்டா திரிவு பரவலுக்கு மத்தியில் அமெரிக்கா முழுவதும் மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100,000 -க்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர். 6 மாதங்களின் பின்னர் அமெரிக்காவில் பதிவாகும் அதிபட்ச தொற்று நோயாளர் தொகையாக இது அமைந்துள்ளது. அத்துடன், தினசரி 400 வரையான கொரோனா மரணங்களும் அங்கு பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா