இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த போட்டி மழை காரணமாக தாமதிக்கப்பட்டது.
இதனையடுத்து அணிக்கு 47 ஓவர்கள் என்றதன் அடிப்படையில், மாலை 4 மணிக்கு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதற்கமைய மட்டுப்படுத்தப்பட்ட 47 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென் ஆபிரிக்க அணி 283 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி சார்பில், ஜன்னெமன் மாலன் ஒன்பது 4 ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்களாக 121 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் துஷ்மந்த சாமீர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலங்கை அணி 284 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.
இலங்கை அணி 25 ஓவர்களுக்கு 114 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதன் பின்னர் டக்வத் லூயிஸ் முறையில் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணியின் வெற்றியிலக்கு 265 ஓட்டங்களாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 36.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலன்க ஐந்து 4 ஓட்டங்கள், மூன்று ஆறு ஓட்டங்கள் அடங்களாக 77 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் டப்ரைஸ் ஷம்ஸி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 : 1 என சமநிலைப்படுத்தியுள்ளது தென்னாபிரிக்கா.
தொடரின் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் 3வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்க் கிழமை பகல் - இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை