பிரேசில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்து அதிகரித்தது. உலகில் அமெரிக்காவை அடுத்து அதிகளவு கொரோனா மரணங்கள் பிரேசிலில் பதிவாகியுள்ளன.
பிரேசிலில் தொற்றுநோய் தொடங்கி ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் உத்தியோகபூா்வ தரவுகளின் படி இறப்பு எண்ணிக்கை இன்று 600,880 ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம் அமெரிக்காவில் மொத்த இறப்புக்கள் இன்று காலை வரையான தரவுகள்படி 733,822 ஆக உள்ளது.
பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தொற்றுநோயைக் கையாண்ட விதம் தவறானது இதுவே நாட்டில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் தீவிரமாகக் காரணம் எனக் கடுமையான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வைரஸ் அச்சுறுத்தலை அவர் மீண்டும் மீண்டும் குறைத்து மதிப்பிட்டார். தனிமைப்படுத்தல் விதிகளை அவா் கண்டுகொள்ளவில்லை. தடுப்பூசி போடவும் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மறுத்துவிட்டார். முககவசம் அணிவதையும் அவர் நிராகரித்தார். அத்துடன், தடுப்பூசி செயல்திட்டங்களை அவரது அரசாங்கம் மிக மெதுவாகவே முன்னெடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்