கவலைக்குரியதாக உலக சுகாதார அமைப்பால் வகைப்படுத்தப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா வைரஸின் புதிய திரிபு இதுவரை 24 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த திரிபின் தாக்கங்கள் குறித்து இன்னமும் அதிகளவில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அத்துடன், தற்போதுள்ள தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றுவதில் பங்களிக்காது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
புதிய திரிபு 23 நாடுகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. ஆனால் நேற்று அமெரிக்காவில் முதல் ஒமிக்ரோன் தொற்று நோயாளி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 24 நாடுகளில் இந்தத் திரிபு பரவுயுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய ஒமிக்ரோன் திரிவு எவ்வளவு விரைவாக பரவுகிறது? மற்றும் எவ்வளவு கடுமையானதாக இருக்கும்? என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் துரிதமாக ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த முழுமையான விபரங்களை விரைவில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.
இதுவரை ஒமிக்ரோன் வைரஸின் இயல்புகளை முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. எனினும் இந்த வகை வைரஸ் தொற்றுக்குள்ளான சில நோயாளிகள் லேசான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிவதாகவும் அவா் தெரிவித்தார்.
சில நாட்களுக்குள் இந்த வைரஸ் பரவல் வேகம் மற்றும் பாதிப்பு குறித்த கூடுதல் தகவல்களைப் பெற எதிர்பார்க்கிறோம் எனவும் மரியா வான் கெர்கோவ் குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா