உக்ரரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் வசிக்கும் பதினான்கு மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளது.
உக்ரைனில் உள்ள பதினான்கு இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும், அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை தற்போது தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து இலங்கை பிரஜைகளையும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.