அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி செய்தார். ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து வரும் விமானங்கள் தங்கள் வான்பரப்பில் நுழையத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான அல்லது ரஷ்யாவால் இயக்கப்படும் விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா வரவேண்டிய சில விமானங்கள் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுவிட்டன.
ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, இந்தத் தடை மூலம் மேலும் தனிமைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் மீதான தாக்குதல் இன்று ஏழாவது நாளாகத் தொடரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கிய்வுக்கு மேற்கில் உள்ள ஜைட்டோமைர் நகரின் மீது நேற்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அவசர கால சேவை கூறுகிறது.
இத்தாக்குதலில் மூவர் காயமடைந்திருப்பதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் அந்த சேவை தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலில் குறைந்தது பத்து வீடுகள், ஒரு மருத்துவமனை ஆகியவை சேதமடைந்தன.
சேதமடைந்த வீடுகள் சிலவற்றில் தீப்பற்றி எரிவதாகக் காட்டும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.