திருகோணமலை குரங்கு பாலம் தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் உடலம் இன்று இரவு 10.00 மணியளவில் திருகோணமலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து பொது மயானத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தினை மயானத்திற்குள் கொண்டுவருவதற்கு மயான வாயில் கதவின் திறப்பு கொண்டுவர தாமதம் ஆனதால் சடலம் தகனம் செய்யப்படாமல் பல மணி நேரம் வாகனத்திலேயே வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக திருகோமலையில் இருந்து செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கதவு திறந்து உள்ளே சடலம் கொண்டுசெல்லப்பட்ட பின்னர், தகனம் செய்பவருக்கு உரிய பாதுகாப்பு அங்கி இன்மையால் தனக்கு பாதுகாப்பு அங்கி தரப்படும்வரை சடலத்தை எரிப்பதற்கு முன்வரமாட்டேன் என்று அவர் தெரிவித்திருக்கின்றார். அதனைதொடர்ந்து அவருக்கான அங்கி வழங்கப்பட்டபின்னர். சடலம் தகனம் செய்யப்பட்டது.
8.00 மணிக்கு வைத்தியசாலையில் இருந்து வாகனத்தில் ஏற்றப்பட்ட சடலம் 2 மணி நேர தாமத்தத்தின் பின்னர் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பொலிசார் மற்றும் வைத்தியர்கள் ஊடகவியலாளர்களைத்தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் பங்குகொள்ளவில்லை.
களுத்துறை பகுதியைச்சேர்ந்த இவர் அண்மையில் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம்