கிளிநொச்சி மாவட்டம் கிளாலி பகுதியில் மணல் ஏற்றச் சென்றபோது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பளை வைத்தியசாலைச் சூழலில் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் கிளாலிப் பகுதியில் மணல் ஏற்றச் சென்ற கெற்பெலி, மிருசுவிலைச் சேர்ந்த திரவியம் இராமகிருஸ்ணன் (வயது 24) என்பவர் இராணுவத்தினர் நடத்தியதாகத் தெரிவிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்திருக்கின்றார்.
உடனடியாக முச்சக்கரவண்டி ஒன்றில் அவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார். ஒரு மணி நேரம் கடந்தும் வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகம் அளிக்கவில்லை என்றும் பின்னர் இளைஞர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அங்கு திரண்ட இளைஞர்கள் குழப்பத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நிலமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டு வைத்தியசாலைச் சூழல் பதற்றமாக காணப்படுவதாக தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி