இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மாலுமி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாலுமி கொழும்பு - 13, ஜிந்துபிட்டியில் வசிப்பவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து கொழும்பு ஜிந்துப்பிட்டி வீதியைத் தற்காலிகமாக மூடியுள்ளது.
எனினும், இது சமூகப் பரவல் அல்ல என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனாலும், அந்தப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் பழகிய மேலும் சிலரைக் கண்டறிய சுகாதார பாதுகாப்புத் தரப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த மாலுமி இந்தியாவிலிருந்து வருகை தந்ததையடுத்து 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 14 நாட்களின் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து வீடு திரும்பிய இவர் வீட்டில் மேலும் 14 நாட்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.இந்தநிலையில், அந்தக் காலப்பகுதியில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு