கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையில் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்யை தினம் 56 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று மேலும் 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக, இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக பணி புரிந்த 27 வயதுடைய பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டதால் இலங்கையில் மீண்டும் சமூகப் பரவல் நிலை ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இன்று தொற்று உறுதியான 196 பேருடன் சேர்த்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ள நிலையில் தற்போது 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை