இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாது. இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதி வழங்க வேண்டாம் என கடற்படை அதிகாரியிடம் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இறுக்கமான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேசச் செயலாளர்கள், அனார்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், பொலிஸ் கடற்படை அதிகாரிகள், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,,,,
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் 14 நபர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
எமது மாவட்டத்திலும் நோய் பரவாமல் இருப்பதற்கான தற்காப்பு தொடர்பான ஆயத்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கையின் படி எங்களுடைய மாவட்டத்தை பொறுத்தவகையில் இது வரை ஆபத்தான நிலமை ஏற்படவில்லை.
மேலும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார் தங்களுடைய முழுமையான நடவடிக்கைகள் குறித்த விடையம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதன் போது கடற்படை அதிகாரிக்கு நான் இறுக்கமான அறிவுறுத்தல் வழங்கினேன்.
இந்தியாவில் இருந்து எவரும் கடல் மார்க்கமாக இங்கே வருவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இந்திய டோலர் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் கூட வர அனுமதிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம்.
அதற்கு மேலதிகமாக பிரதேசச் செயலாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம். இவ்விடையம் தொடர்பாக பிரதேச மட்டத்திலும் இக்கூட்டங்களை நடத்துமாறு கோரியுள்ளோம்.
-நோய்க்கட்டுப்பாடுகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க உரிய தரப்பினருக்கு கோரியுள்ளோம். இதன் போது இணைந்து செயற்படுவதாக இன்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம்.
இதற்கு மேலதிகமாக நோய்ப் பரம்பல் தற்போது எமது மாவட்டத்தை பொறுத்த வகையில் எதுவும் இல்லாத நிலையில் சந்தேகங்களின் பெயரில் சில தனிமைப்படுத்தும் நிலையங்களில் இராணுவத்தின் உதவியுடன் இயங்க வைத்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்