அங்கொடை ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடி பின்னர் கைது செய்யப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர் தொடர்பில் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் இருந்து தப்பித்துச் செல்லும் போது அரைக்காற்சட்டை அணிந்திருந்த கொரோனா தொற்றாளர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த ஆடைகளை எடுத்து மாற்றிக் கொண்டு சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு கழற்றிய தனது காற்சட்டையை குறித்த வீட்டின் கூரையில் வீசி எறிந்திருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றையயும் திருடியுள்ள அவர் அத்துவிச்சக்கர வண்டியிலேயே கொழும்பு கோட்டைக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உடைகள் மற்றும் சைக்கிள் என்பவற்றை திருடிய வீடு இனம் காணப்பட்டு அங்கு வீசியெறியப்பட்ட அவரது ஆடைகள் மீட்கப்பட்டு எரியூட்டப்படுள்ளதுடன் குறித்த வீடு தொற்று நீக்க நடவடிக்கை மூலம் சுத்திகரிக்கப்பட்டுள்ளது.இதுதவிர சி.சி.ரி.வி. காணொளி பதிவுகள் ஆராயப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தப்பி ஓடியதில் இருந்து கைது செய்யப்படும் வரை குறித்த கொரோனா நோயாளி வேறு யாருடனாவது தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தாரா என்பது குறத்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கொரோனா தொற்று கைதிக்கு எதிராக சட்டமீறல் மற்றும் பொறுப்பற்ற நடத்தை குற்றச்சாட்டுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு