அதிரடிப் படை பாதுகாப்புடன் குட்டி இராணுவ ஆட்சி நடத்தும் சுமந்திரன் நாட்டில் இராணுவ ஆட்சியை எதிர்ப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளதாக முன்னார் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்-கிளிநொச்சி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக, திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் வடமாகாண உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் இராணுவ ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது.
16 விசேட அதிரடிப்படையினரையும், நான்கு அமைச்சர்களின் பாதுகாப்பு படை வீரர்களையும் ஐந்து பீல் பைக்குகளையும் வைத்துக்கொண்டு இராணுவ ஆட்சியை நடத்தும் சுமந்திரன் இராணுவ ஆட்சியை எதிர்ப்பது நகைச்சுவை ஆனது எனவும் சிவாஜிலிங்கம் இதன் போது தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை மட்டக்களப்பு வன்னி ஆகிய மாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எவ்வித கூட்டங்களையும் நடாத்த முடியாமல் பலவீனமாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
மதுபான சாலைகளை நடத்துபவர்கள் வீட்டுச் சின்னத்திலேயே அதிக அளவில் போட்டியிடுகின்றார்கள். அவ்வாறானவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவை செய்யப் போகின்றார்கள்? அரசியல் தீர்வு பற்றி பேச போகின்றார்கள்?
நீங்கள் இம்முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை